News

சீனாவில் பன்றி நுரையீரலை மனிதருக்கு பொருத்தி சாதனை

 

 

சீனாவில் மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி அதன் இயக்கத்தை அந்நாட்டு மருத்துவர் குழு ஆய்வு செய்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் குவாங்ஜோவில் உள்ள மருத்துவப் பல்கலை மருத்துவமனையில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜியான்ஷிங் ஹே தலைமையில் இந்த சோதனை முறையிலான அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக சீனாவின் பாமா சியாங் பன்றியின் நுரையீரல் பயன்படுத்தப்பட்டது. இது அளவில் மனித நுரையீரல் அளவைக் கொண்டிருந்தது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்றவாறு பன்றியின் நுரையீரலில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன் பின் அந்த நுரையீரல் 39 வயது மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தப்பட்டது. மூளை சாவு என்பது மூளையை தவிர பிற உடல் உள்ளுறுப்புகள் இயங்கும். எனவே பன்றியின் நுரையீரல் சோதனை அடிப்படையில் அவருக்கு பொருத்தி, சுவாச குழாய் மற்றும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டது. இது 9 நாட்கள் இயங்கியது.

ஆரம்பத்தில் பிராண வாயுக்களை பரிமாற்றி ரத்த ஆக்சிஜன் அளவை உடலில் சகஜமாக வைத்திருந்தது. 24 மணி நேரத்துக்கு பின் நுரையீரலில் திரவம் சேர துவங்கியது. மூன்று முதல் ஆறு நாட்களில் நோய் எதிர்ப்பு திசு சேதமடைந்தது. ஒன்பது நாளுடன் சோதனை நிறுத்தப்பட்டது.

கிடைத்த தகவல்களை வைத்து மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை சீன மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்காவில், டிம் ஆண்ட்ரூஸ், 67, என்ற நபருக்கு கடந்த மார்ச்சில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவர் ஆறு மாதங்களுக்கு மேல் உயிருடன் இருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top