News

தாய்லாந்து தாக்குதல்: கம்போடியாவை சேர்ந்த 29 பேர் படுகாயம்

 

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. எல்லையில் உள்ள ஹிந்துக் கோவிலுக்கு இரண்டு நாடுகளுமே பரஸ்பர உரிமை கோருவதே பிரச்னைக்கு முக்கிய காரணம் ஆகும். நீண்ட காலமாக பிரச்னை இருந்த போதும், கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், கம்போடியா ராணுவ வீரர் கொல்லப்பட்டார். தாய்லாந்தில் இருந்து இறக்குமதிக்கு கம்போடியா தடை விதித்தது. கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். போர் விமானங்கள் மூலம் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. இதில் இரு நாடுகளிலும் 48 பேர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு அமைதி திரும்பியது.

இந்நிலையில், இந்த பகுதியில் கம்போடிய பகுதியில் பன் நோங் யா கயேவ் என்ற கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் தாய்லாந்து ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாய்லாந்து ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் புல்லட்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கிராம மக்கள் மற்றும் புத்த மதத்துறவிகள் 29 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று மாலை 3:40 மணியளவில், 200க்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியில் தடையை மீறி குவிந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ரப்பர் புல்லட்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டது. கம்போடிய தரப்பினர் கற்கள், மரக்கட்டைகளை வீசினர். இதில் ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

கம்போடிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், தாய்லாந்து ராணுவ வீரர்கள் அத்துமீறி எல்லையை தாண்டியதுடன், வீடுகளில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தாய்லாந்து ராணுவத்தின் இந்த அத்துமீறல், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத்தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த பிரச்னை தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெசுக்கு கம்போடிய பிரதமர் ஹன் மனேட் கடிதம் எழுதியுள்ளார்.

கம்போடியாவைச் சேர்ந்த மனித உரிமை குழு, சர்வதேச சட்டங்களையும், பிராந்திய சட்டங்களையும் தாய்லாந்து மதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top