News

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 ராணுவ வீரர்கள் பலி

 

 

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.

மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து, இருநாட்டு எல்லையிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆப்கானிஸ்தானில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரத்தை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இந்த ராணுவ தளத்திற்கு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் இன்று நுழைந்தது. ராணுவ தளத்தின் வாயிலில் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் வெடிக்கச்செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதேவேளை, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் 48 மணிநேர சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர கத்தார் அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top