இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இடையே 14 மாதங்களாக சண்டை நடந்து வந்தது. அதைத்தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தப்படி, லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை ஜனவரி மாதத்துக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் வற்புறுத்தல்படி, இந்த காலக்கெடுவை பிப்ரவரி 18-ந் தேதிவரை (இன்று) நீட்டிக்க லெபனான் ஒப்புக்கொண்டது. போர்நிறுத்தத்துக்கு பிறகும் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஏவுகணைகள், போர் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தது.
இந்நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் இயக்க தலைவர் முகமது ஷாஹீன் பலியானார். இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அவர் லெபனான் நாட்டில் ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாட்டுத்துறை தலைவராக இருந்ததாக கூறியுள்ளது. அவர் ஈரானின் நிதியுதவி மற்றும் உத்தரவுப்படி, இ்ஸ்ரேல் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளது. முகமது ஷாஹீன் பலியானதை ஹமாஸ் இயக்கமும் உறுதி செய்துள்ளது. அவரை ‘ராணுவ தளபதி’ என்று கூறியுள்ளது.
லெபனான் ராணுவ சோதனைச்சாவடி அருகே ஒரு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்று முடிவடையும்நிலையில், இத்தாக்குதல் நடந்துள்ளது. அதனால், திட்டமிட்டபடி படைகள் வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.