யாழ்ப்பாண நகரப் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (01) குறித்த போராட்டம் இடம்பெற்றது.
செம்மணி புதைகுழி, பயங்கரவாத தடைச் சட்டம், பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இந்த போராட்டத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே, பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
