தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சராக செயற்பட்டிருந்த பௌத்த துறவியான ஜயதிலக்க என்பவரால் குருந்தூர் மலை பிரதேசத்தில் திட்டமிட்டு காணிகள் அபகரிக்கப்பட்டதாக மிஹிந்தலை விஹாராதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கடிதத்தை தான் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சாணக்கியன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் சந்தித்தேன்.
அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்காகும்.
குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன் வாதாடி இருந்தார் .
விஹாராதிபதி எனக்கு எழுத்து மூலமான ஓர் கடிதத்தை வழங்கி இருந்தார். அதில் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் 21.07.2025 முறைப்பாட்டின் பிரதி ஆகும்.
அதில் அவர் பெயர் குறிப்பிட்டு தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அத்தியாட்சகராக செயற்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல்பொருள் திணைக்களம் கையப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார்.
பெளத்த துறவியான இவர் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ் ஆவணத்தை என்னிடம் தருவதற்காக என்னை அழைத்திருந்தார். அத்துடன் அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.
இந்த நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்பதனை தெரிவித்திருந்தார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
