மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது.




இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்பொழுது பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர் ஒருவர் ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள் , உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவீரர் வார நிகழ்வுகளை எழுச்சிபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்பர்சிட்டி, வியாபாரிமூலை, சுப்பர்மடம், முனை, கோரியடி உள்ளிட்ட பல இடங்களில் பந்தல்கள் அமைத்து, சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் வார நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.
அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுப்பர்மடம் பொதுமண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர்வார நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லத்தின் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
கோப்பாய் துயிலுமில்லம் காணப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில் அதன் வாயிலில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் தற்போதைய கல்லறை அமைந்துள்ள இடத்தில் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
பிரதான ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார். பின்னர் மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவு பெயர்ப்பலகைகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.


மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (21.11.2025) ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு வவுனியா மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.


மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகள்வுகள் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.


தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
அந்த வகையிலே இன்று (21) காலை தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தினுடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது. குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வு பூர்வமாக மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகம் முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர்.

