மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் (25.11.2025) இடம்பெற்றுள்ளது.
மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பொதுமக்கள் இன்றையதினம் காலை சென்று துப்பரவு பணிகளை செய்துள்ளனர்.
அப்போது சென்றவர்கள் மீது மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தினை சுற்றிவளைத்து அங்கிருந்தவர்கள் மீது இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும் துப்பாக்கியால் தாக்கி அடித்து விரட்டியதில் தப்பித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து கூறும் போது,
“இறந்த உறவுகளை நினைவு கூறலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் இப்படி கூறிவிட்டு மறைமுகமாக உங்கள் புலனாய்வுத் துறையினரையும், இராணுவத்தினரையும் அனுப்பி தாக்குவதா? அளம்பில் புலனாய்வுத் துறையினர் எம்மை வெருட்டி இடையூறு செய்கிறார்கள்.
மணலாறு துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் உறங்குகின்றனர். நான்கு நாட்களாக நாம் துயிலுமில்லத்தினை துப்பரவு செய்கிறோம்.
ஜனாதிபதி சொல்வது ஒன்று. ஆனால் இங்கு இராணுவத்தினரும், புலனாய்வுத் துறையினரும் செய்வது ஒன்று. இப்படி செய்வது என்றால் ஏன் இறந்தவர்களை நினைவு கூறலாம் என கூறினீர்கள்? இதற்கு எமக்கு ஒரு தீர்வு வேண்டும்” என கூறியுள்ளனர்.
