பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் (Bangladesh) மக்கள் போராட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்டது.
அதன்போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததுடன் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இரகசியமாக தப்பித்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தனா். இன்று வரை அவர் இந்தியாவில் தான் வசித்து வருகிறார்.
நடந்த போராட்டங்களை ஒடுக்கியதில் “சூத்திரதாரி மற்றும் முக்கிய கருவியாக” இருந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் தலைமறைவாக இருக்கும் ஷேக் ஹசீனா, நீதிமன்ற உத்தரவுகளை மீறி விசாரணைக்கு முன்னிலையாகாததால், அவர் தலைமறைவாக இருக்கும் நிலையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
