News

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை 

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது.

இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.

ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது.

இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது.

அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கம் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே.

இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர் இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமானங்களை இரத்து செய்துள்ளன.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது.

ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top