கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா என்பவர் அவரது ஆண் நண்பரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டொரன்டோ ஸ்கார்போரா பல்கலை வளாகம் அருகே 20 வயதான இந்திய மருத்துவ மாணவர் ஷிவாங்க் அவஸ்தி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது இந்தியர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைலேன்ட் க்ரீக் டிரைல் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசாரணையை தொடங்கினர். இந்த ஆண்டில் மட்டும் டொரன்டோவில் நிகழ்ந்த 41வது கொலை சம்பவமாகும்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள “காடுகளுடன் கூடிய பகுதியில்” துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் இதனைத் தொடர்ந்து, டொராண்டோ காவல்துறையுடன் இணைந்து பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கைகளை எடுத்ததாகவும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்கார்பரோ வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த முடக்கம் பின்னர் நீக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய மருத்துவ மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
