எதிரிகளின் ரேடாரில் சிக்காத, ‘மிகவும் அபாயகரமான’ ஆறாம் தலைமுறை போர் விமானமாகக் கருதப்படும் ‘எப்-47’ விரைவில் அமெரிக்க இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
அதேபோல், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்காக அதிநவீன கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ரேடாரில் சிக்காத ஆறாம் தலைமுறை எப்-47 போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ‘போயிங்’ நிறுவனம் பெற்றுள்ளது.
இதன் முதல் போர் விமானம் விரைவில் அமெரிக்க விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த எப்-47 விமானம், முதன்மை இறக்கைகளுடன், காக்பிட் அருகே ‘கனார்ட்’ எனப்படும் சிறிய இறக்கைகள் கொண்ட சிறப்பான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இவை கூர்மையான திருப்பங்கள், தாக்குதலின் போது விமானத்தின் சமநிலை மற்றும் முன்-பின் சாய்வு கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன.

நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 1,800 கிலோமீட்டர் சுற்று தூரத்தை இடையூறு இன்றி கடக்கும் திறன் பெற்றுள்ளது.
மேலும், மணிக்கு சுமார் 2,500 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில், மேம்பட்ட தொலை தூர மற்றும் குறுகிய தூர ஏவுகணைகள், ஆளில்லா சிறிய விமானங்கள் (ட்ரோன்கள்) ஆகியவற்றை இணைக்க முடியும்.
இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தாமாகவே முடிவெடுத்து செயல்படும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க விமானப்படை சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 185-க்கும் மேற்பட்ட எப்-47 போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் முழுமையாக விமானப்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
