66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புக்களில் இருந்தும் 35 ஐ.நா. அல்லாத சர்வதேச அமைப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்புக்களில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். காலநிலை மாற்றம், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முக்கிய அமைப்புக்களில் இருந்து அமெரிக்கா விலகுவது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் அமைப்புக்களில் இருந்தே நாங்கள் விலகிக் கொள்கிறோம். இதன்படி இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. காலநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்ளிட்ட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவது குறிப்பிடத்தக்கது.
