News

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்…! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட வடகிழக்குப் பகுதியில் இருந்து பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது.

இதைக் கணித்த அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான ப்ளிசார்டு (Blizzard) எச்சரிக்கையை, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் விடுத்துள்ளது.

பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் மூன்று அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது.

இதையடுத்து நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரப் போக்குவரத்து தவிர அனைத்துப் போக்குவரத்திற்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000-இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா முழுவதும் 13,000 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு நியூயார்க் நகரத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன், மேரிலேன்ட் மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கிய பனிப்புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top