சுதந்திர நாளாகிய இன்று (04-02-2026) கரி நாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயமுன்றலில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்காவளாகம் வரை a9 வீதி வழியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொத்துவில தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்ட அமைப்பு ஆகிய இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், கிளிநொச்சி பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கானாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி நகரை அண்மித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்று வரும் போது ஏ9 வீதியில் சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய ஒரு சாராருக்கும், போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் குழப்ப நிலை தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


