பிரான்சிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தெற்கு பிரான்சிலுள்ள Sanary-sur-Mer நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியை ஒருவரை அவரது வகுப்பில் படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் நேற்று கத்தியால் குத்தியுள்ளார்.
அந்த ஆசிரியைக்கும் அந்த மாணவருக்கும் இடையில் ஏற்கனவே உரசல்கள் இருந்ததாகவும், அவர் மீது அந்த மாணவர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
20 மாணவர்கள் பயிலும் வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த அந்த 60 வயது ஆசிரியையை, அந்த மாணவர் சக மாணவர்கள் முன்னிலையில் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த அந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பள்ளி உடனடியாக மூடப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
