ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லைத்தாண்டிய மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பஜௌர், பன்னு ஆகிய பகுதிகளில் ஆப்கானிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கள்கிழமை (மார்ச் 16) இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிர்தோத் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரித்திருந்தாலும், பயங்கரவாத செயல்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது நபி, ரஷீத்கான் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
