News

ஈரான் போரில் அதிரடி திருப்பம்… ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப்

 

உலகம் மொத்தம் எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்களை ட்ரம்ப் களமிறக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் அமெரிக்க இராணுவம் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் வியாபித்து வந்த நிலையிலேயே, தற்போது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில், அமெரிக்கா Marines எனப்படும் கடற்படை சேவையை களமிறக்க உள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் கோரிக்கையை ஏற்று, கடற்படைப் பயணப் பிரிவை (Marine expeditionary unit) களமிறக்க போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒரு கடற்படைப் பயணப் பிரிவு என்பது பொதுவாகப் பல போர்க்கப்பல்களையும் 5,000 வீரர்களையும் உள்ளடக்கியதாகும். ஜப்பானில் செயல்பட்டு வந்த USS Tripoli என்ற போர்க்கப்பலுடன், இந்த 5000 வீரர்களும் தற்போது மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களின் இறப்பு எண்ணிக்கை 13 என உயர்ந்தது, உள்நாட்டு எரிபொருள் விலை கேலனுக்கு 3.60 டொலராக உயர்ந்தன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஒரு வாரமாக பொதுவெளியில் தோன்றாமல், பல சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, தெஹ்ரான் வீதிகளில் ட்ரம்பை சவால்விடும் வகையில் ஏளனம் செய்தார்.

இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ள நிலையில், இந்த வலுப்படுத்தப்பட்ட படைப் பிரிவு ஹார்முஸ் நீரிணை நோக்கிப் பயணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரசீக வளைகுடாவில், பிரதான நிலப்பகுதியிலிருந்து சுமார் 16 மைல் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவுகள், ஈரானின் எரிபொருள் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளுகிறது.

கார்க் தீவுகளைக் கைப்பற்றுவது தமது பட்டியலில் தற்போது இடம்பெறவில்லை என வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், என்னால் நொடிகளில் என் மனதை மாற்றிக்கொள்ள முடியும் என்றார்.

முன்னதாக, ஈரான் தாக்குதலில் இருந்து ஏன் அமெரிக்க இராணுவத்தால் ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க முடியவில்லை என்ற கேள்விக்கு போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் பதிலளிக்க மறுத்திருந்தார்.

மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கும் அமெரிக்கா பாதுகாப்பளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஹார்முஸ் பகுதியில் US Marines களமிறக்கப்படுவது, ஈரான் தரப்பில் இருந்து என்ன எதிர்வினை முன்னெடுக்கப்படும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது ஹார்முஸ் நிரிணையானது 31 தளபதிகளுடன் செயல்படும் IRGC-ன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top