ஈரானில் போர் காரணமாக 32 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், ஈரான் நடத்தும் தாக்குதலில் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேலில் பலர் பலியாகி வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் பல லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். ஆரம்பநிலை மதிப்பீடுகளின்படி மொத்தம் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈரான் மக்கள் சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கடந்த இரு வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 6 முதல் 10 லட்சம் வரையிலான ஈரான் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐநா அகதிகள் அமைப்பின் அவசரகால ஆதரவுக்குழு மற்றும் மத்திய கிழக்கின் அகதிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அயாகி இடோ தெரிவித்தார்.
போர் நீடித்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் இது வருத்தத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேலில் இதுவரை எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறித்த எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் நாட்டின் வடக்குப்பகுதி மற்றும் கிராமப்புறங்களை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
