News

லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள்

லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) ‘பலஸ்தீன ஆக்ஷன்’ (Palestine Action) அமைப்பிற்கு ஆதரவாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருதப்படும் பலஸ்தீன ஆக்ஷன் அமைப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியிருந்த 18 முதல் 87 வயதுக்குட்பட்ட 523 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இந்த அமைப்பு “பயங்கரவாத” அமைப்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிப்பது 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் | 500 Protesters Arrested In London Police

இருப்பினும், பேச்சுரிமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை உயர் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் ரத்து செய்திருந்தது.

ஆனால், அரசாங்கம் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மார்ச் மாத இறுதியில் இருந்து பொலிஸார் மீண்டும் கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமைதியான முறையில் பதாகைகளை ஏந்திப் போராடிய முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்வது சிவில் உரிமைகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என அவ்வமைப்பு சாடியுள்ளது.

இதேவேளை, காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் துணை போவதாகவும், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் | 500 Protesters Arrested In London Police

2020-இல் தொடங்கப்பட்ட பலஸ்தீன ஆக்ஷன் அமைப்பு, இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான எல்பின் சிஸ்டம்ஸ் (Elbit Systems) உள்ளிட்ட ஆயுதத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பான சட்ட ரீதியான மீளாய்வு எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top