அமெரிக்காவில் கடந்த ஜனவரி 7ஆம் திகதி கறுப்பின இளைஞர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் சிலர் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மெம்பிஸ் பகுதியினை சேர்ந்த கறுப்பின வாலிபர் டயர் நிக்கோலஸ் (வயது29) என்பவர் போக்குவரத்து விதிமுறையை மீறி காரை ஓட்டியதாக குற்றச்சாட்டப்பட்டு பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது நிக்கோலசை 5 பொலிஸார் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கறுப்பின வாலிபரை பொலிஸார் தாக்கி கொன்றமை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபரை தாக்கிய 5 பொலிஸாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நிக்கோலசை பொலிஸார் பிடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நிகோலஸ் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் காவல்துறையினரின் சீருடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி வெளியாகி உள்ளது.
அவரை தாக்கும் 5 பொலிஸாரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். காரில் செல்லும் நிக்கோலசை பொலிஸார் தடுத்து நிறுத்துகிறார்கள். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது தான் தவறு செய்யவில்லை. வீட்டுக்குத்தான் செல்கிறேன் என்று கூறி நிக்கோலசை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இதனால் அவரை பொலிஸார் பலமாக தாக்குகிறார்கள். அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்கிறார்கள். பின்னர் நிக்கோல்சை முகத்தில் சரமாரியாக தாக்குகிறார்கள். கைகள் பின்புறம் விலங்கிட்ட நிலையில் மயங்கியபடி கீழே விழுந்து கிடக்கும் நிக்கோலஸ் மருத்துவமனைக்கு பொலிஸார் அழைத்து செல்கிறார்கள்.
இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நிக்கோலஸ் பெற்றோரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டும் இதேபோன்று கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட்டை பொலிஸார் தாக்கி கொன்றதால் பெரும் போராட்டங்கள் நடந்தமையும் குறிப்பிடத்தக்கது.