மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் புலானி என்ற முஸ்லிம் பழங்குடியின குழு அரசு மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இவர்கள் அந்நாட்டில் உள்ள மற்றொரு பயங்கரவாத குழுவான போக்கோ ஹராமில் இருந்து வேறுபட்டவர்கள். போக்கோ ஹராம் மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாட்டோவில் 1,336 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிளாட்டோ மாகாணத்தில் ஜிக்கே கிறிஸ்தவ பண்ணை குழுவினர் இருந்த பகுதிக்குள் புலானி குழுவினர் துப்பாக்கிகளுடன் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த, 51 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
அதன் பின், அப்பகுதியில் இருந்த வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு, இந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களை உடனே கண்டுபிடித்து தண்டிக்க அதிபர் போலா தினுபு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.