தங்கள் கடல் எல்லை பகுதியிலிருந்து கப்பல்களை வெளியேற்றுமாறு அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இன்னும் நேரடியாக இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்க்கவில்லை. மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், திடீரென அமெரிக்கா உள்ளே வந்தது. ஈரான் மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. நிலத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் பாமை அமெரிக்கா பயன்படுத்தியது.
மேலும், இது ஈரானை ஆத்திரப்படுத்தி உள்ளது இந்த தாக்குதலுக்குப் நிச்சியம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி இருக்கும் என்றும் அதுவும் உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் ஈரான் எச்சிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என்று ஈரானுக்கு ஆதரவாக ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது. தங்களது கடல் எல்லைப் பகுதியிலிருந்து கப்பல்களை வெளியேற்றுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே செங்கடல் பகுதியில் செல்லும் சர்வதேச வர்த்தக கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதி கிளர்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர். ஏமனில், ஹவுதி அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.