ஈரானில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானில் 30 ஆண்டுகளுக்குமேல் அகதிகளாக வசித்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை 2021ம் ஆண்டு தலிபான்கள் கைப்பற்றியப்பின்னர் ஈரானுக்கு மேலும் பலரும் அகதிகளாக சென்றனர்.
இந்நிலையில், ஈரானில் வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானில் வசித்து வரும் நிலையில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானியர்கள் இன்றுடன் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் ஆப்கானியர்களுக்கு எதிரான நிலைப்பாடு உள்ள நிலையில், இஸ்ரேல் – ஈரான் மோதலின்போது இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆப்கானியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.