வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து மன்னாரில் (Mannar) மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இரண்டாம் கட்ட காற்றாலை கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்று மன்னாரில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஒன்பது மணி முதல் மன்னார் பஜார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாலர்களை குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
குறித்த போராட்டம் ஊடாக நாங்கள் தென்னிலங்கைக்கு ஓர் செய்தியை சொல்ல வேண்டும்.
எமது மக்களையும் மற்றும் மண்ணையும் யாரும் அபகரிக்க முடியாது, நாங்கள் துப்பாக்கி ஏந்தி போராடிய போது தியாகங்களை செய்தவர்கள்.
எனவே அரசியல் கட்சி பேதங்களின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை மற்றும் மாநகர பை உறுப்பினர்கள், அனைவரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தென்னிலங்கைக்கு நாங்கள் பாடம் புகட்டும் வகையில் எமது மண்ணையும் மக்களையும் காப்பற்றும் வகையில் இடம் பெறும் இப்போராட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.