ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
குறிப்பாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதலை நடத்தினர்.
இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து ஹவுதி அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், ‘இந்தத் தாக்குதலில் தலைநகர் சனாவில் தான் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ராணுவ தலைமையகம் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளது.