துருக்கியில் வாசனை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் கிடங்கில் தீ பிடித்ததில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
இஸ்தான்பூலில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தில்லோவசி. இது ஒரு தொழிற்பேட்டை நகரமாகும். இங்கு ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் கிடங்குகள் இயங்கி வருகின்றன.
இந் நிலையில் அங்குள்ள வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் கடையின் கிடங்கு ஒன்றில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பற்றிய தீ, 2 மாடிகளுக்கும் வேகமாக பரவியது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் அவர்கள் இறங்கினர். சிறிதுநேர போராட்டத்துக்கு தீயை அவர்கள் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும், தீயில் சிக்கி கட்டடத்தின் உள்ளே இருந்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்க, அவரை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ பிடித்ததில் கிடங்கின் 2 மாடிகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. சேத மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் எதனால் தீ பிடித்தது என்பது பற்றிய விவரமும் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
