News

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 28 பேர்

நைஜீரியாவின் பிளாட்டியூ (Plateau) மாகாணத்தில் வருடாந்த இஸ்லாமிய நிகழ்வு ஒன்றிற்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 28 பேர் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கிராமங்களுக்கு இடையே அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த கும்பல் வழிமறித்து இந்தக் கடத்தலை அரங்கேற்றியுள்ளது.

கடந்த மாதம் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டதாக நைஜீரிய அதிகாரிகள் அறிவித்த அடுத்த நாளே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

க்ஷ. பிளாட்டியூ மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் கடத்தல்காரர்கள் தற்போது பிணைத்தொகை (Ransom) கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ‘பண்டிட்கள்’ (Bandits) என்று அழைக்கப்படும் குற்றக் கும்பல்களால் பிணைத் தொகைக்காக மக்களைக் கடத்துவது அண்மைக்காலமாக ஒரு தொடர்கதையாகியுள்ளது.

பிணைத் தொகை வழங்குவது சட்டவிரோதமானது என்றாலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை விடுவிப்பதையே இந்தக் கும்பல்கள் தங்கள் வருமான ஆதாரமாகக் கொண்டுள்ளன.

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்லாமியக் கிளர்ச்சிகளுக்கும், தற்போதைய இந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியதுடன், அந்த “அவமானகரமான நாட்டுக்கு” (disgraced country) ராணுவத்தை அனுப்ப நேரிடும் என்று எச்சரித்திருந்தார். இது சர்வதேச அளவில் நைஜீரியாவின் பாதுகாப்பு நிலை குறித்த கவலையை அதிகரித்தது.

இருப்பினும், நைஜீரிய அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பாதுகாப்புப் பிரச்சினைகள் பொதுவானவை என்றும் கிறிஸ்தவர்கள் மட்டும் தனியாகக் குறிவைக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.

இது தொடர்பாக அமெரிக்காவுடன் நிலவி வந்த இராஜதந்திரச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளதாக நைஜீரியத் தகவல் துறை அமைச்சர் முகமது இத்ரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், காடுகளில் பதுங்கியிருக்கும் குற்ற கும்பல்களை ஒடுக்க, ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற சிறப்புப் பயிற்சி பெற்ற ‘வனக் காவலர்கள்’ பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top