பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்ராறியோ அரசாங்கம் சிறைச்சாலைகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்கிறது
ஆபத்தான குற்றவாளிகளை சிறைக்குள் வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறைச்சாலைகளை நிர்மாணிக்கவும் விரிவாக்கவும் ஒன்ராறியோ அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் கிழக்கு ஒன்ராறியோவில் புதிய புரொக்வில் (Brockville) சிறைச்சாலை வளாகத்தில் 270 படுக்கைகளும், சென். லோரன்ஸ் வலி (St. Lawrence Valley) சிறைச்சாலை மற்றும் சிகிச்சை மையத்தில் 25 படுக்கைகளும் என மொத்தம் 295 புதிய படுக்கைகள் சேர்க்கப்படவுள்ளன.
“ஆபத்தான மற்றும் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எமது தெருக்களில் நடமாடுவதைத் தடுத்து, அவர்கள் சிறையிலேயே இருப்பதை உறுதி செய்வதற்காக எமது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக சிறைச்சாலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், பிணை நடைமுறைகளையும் வலுப்படுத்தி வருகிறோம்,” என அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார். கடுமையான பிணை நிபந்தனைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட சிறை இடவசதிகள் உள்ளிட்ட இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஸ்காபரோ மற்றும் ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலையும், பயனுள்ள நீதித்துறை முடிவுகளையும் வழங்கும். ஒன்ராறியோ மாநில அரசாங்கம் 2032ஆம் ஆண்டளவில் சிறையில் 1,436 புதிய படுக்கைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதுடன், மேலதிக விரிவாக்கங்கள் மூலம் நீண்ட காலத்துக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கிறது.
