இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இராணுவத்துடனும் அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் ஆளுங்கட்சியினர் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய போதிலும் அவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் தொடர்ச்சியாகப் பின்னடித்தது.
இதையடுத்தே, காணிகளை விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன், யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் உள்ளிட்ட தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கருத்தைத் தொடர்ந்தே பலாலி வீதி உள்ளிட்ட பல விடயங்களில் இராணுவம் விட்டுக்கொடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிகாரிகள் போதிய அழுத்தத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்புத் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டன.
எனினும், இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான வலுவான அழுத்தத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. இராணுவத்தினர் கூறுவதைக் கேட்கும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கை நேற்று வெற்றியளிக்காமைக்கு அரச அதிகாரிகளின் மந்தமான செயற்பாடே காரணம் என்று கூறப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் ஏனைய மாவட்டங்களின் அரச அதிகாரிகள் முழுமையான தரவுகளுடன் வலுவான கோரிக்கைகளை இராணுவத்திடம் முன்வைத்து தமக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் சில காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் ஓரளவு இணக்கம் தெரிவித்த போதிலும் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளில் கணிசமானவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன்படி, பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியில், காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான வீதியை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அங்கு கடற்படை முகாம் உள்ளது என்று கோரியே அந்த வீதி விடுவிப்புக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம், பலாலி இராணுவ மருத்துவமனை, பலாலி கொமாண்டோ பங்களா ஆகியவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இராணுவத்தால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
‘பரிசீலனை செய்யப்படும்’ என்ற வாக்குறுதிகூட இந்தக் காணிகள் தொடர்பில் வழங்கப்படவில்லை.
வயாவிளானில் உள்ள சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயம், தல்சவனவுக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவின் பாதை, பலாலி சந்திப் பகுதியில் உள்ள சந்தை உள்ளிட்டவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இராணுவம் சாதகமாகப் பதிலளித்துள்ளது. எனினும், உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.
காணிகளை விடுவிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைத் தவிளார்கள் உள்ளிட்ட முக்கியமான தரப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.அத்துடன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்த தரப்பாகவும் அவர்களே உள்ளனர்.
இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வலிகாமம் வடக்கிலேயே கணிசமான காணிகள் இராணுவத்தின் பிடியில் உள்ளன.
அவை தொடர்பான முழுத் தகவல்களும் அறிந்தவராக வலிகாமம் வடக்குத் தவிசாளரே உள்ளார். அவரும் நேற்றைய கலந்துரையாடலில் அழைக்கப்படவில்லை.
