News

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் – கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.

இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர்.

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்னர்.

போராட்டம் நடத்திய மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது.

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.

சோனம் வாங்கக் கைது அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளது.

நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும்.

காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும்.

எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top