செங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு சவூதி அரேபிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் ஒரு தடையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தொடர்ந்து 12ஆவது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தல்கள் எழுவதற்கு முன்னரே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக முடக்கியிருந்தது. இதன் தாக்கம் உலகளவில் பணவீக்கத்தை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாக, இந்தப் போர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினருக்கு அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
