74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விமான விபத்தில் 52 பேர் பலியான நிலையில், அந்த விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் விமான பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விமானப் பயணத்தின்போது, பணிப்பெண்கள் முன்னால் நின்று கொண்டு, விமானத்தில் அவசரகால வழி எங்கு உள்ளது? உயிர் காப்பு கவசங்கள் எங்கே இருக்கின்றன? அவசர கால சூழ்நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பதை விளக்கிக் கூறுவார்கள்.
இதற்கெல்லாம் காரணம், 1952-ம் ஆண்டு நடந்த கோர விமான விபத்துதான். அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த விமானத்தின் இறக்கை மற்றும் வால் பகுதிகள் 74 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதாவது, 1952-ம் ஆண்டு அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி பேன் ஆம் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 69 பயணிகள் இருந்தனர். அட்லாண்டிக் கடலின் வான் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், திடீரென மாயமானது. விமானத்தில் 2 என்ஜின்களும் செயல் இழந்துபோனதால் அட்லாண்டிக் கடலில் விழுந்தது.
கடல் நீரில் விமானம் மூழ்கத் தொடங்கியபோது, விமானத்தில் இருந்த உயிர்காப்பு உபகரணங்கள் மூலம் 17 பேர் கடலில் மிதந்து தத்தளித்தனர். 52 பேர் விமானத்துடன் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களில் 13 பேரின் உடல்கள் மட்டுமே கடைசி வரை மீட்கப்பட்டது. அப்போது, கடலில் தத்தளித்தவர்கள், கப்பல் மூலம் மீட்கப்பட்டாலும், கடலின் ஆழம் அதிகமாக இருந்ததால், விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் விமான இறக்கைகள், வால் பகுதி உள்ளிட்ட பாகங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 74 ஆண்டு கால விமான தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.
