News

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட 05 பேர் உயிரிழப்பு!

 

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சரவாக் மாநிலத்தில் உள்ளூர் கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் ‘பறக்கும் வைத்தியர் சேவை’ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று (08) செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த வைத்தியர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் விமானி உட்பட 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சரவாக்கின் தொலைதூர லாங் லெல்லாங் விமான ஓடுதளத்திற்கு அருகே இக்கொடூர விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்த 33 வயதான பெண் வைத்தியர் அய்னுல் பரா , உதவி வைத்திய அதிகாரி, இரண்டு தாதியர்கள் மற்றும் ஹெலிகொப்டர் விமானி ஆகிய ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வீதிப் போக்குவரத்து வசதிகள் இல்லாத அடர்ந்த காடுகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக மலேசிய சுகாதார அமைச்சினால் இச்சேவை இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் ‘BO-105’ (பதிவு எண்: 9M-LLF) ரகத்தைச் சேர்ந்த பழமையான ஹெலிகொப்டர் என மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய காட்டுத்தீயினால் பிராந்தியத்தில் நிலவிய அடர்ந்த புகைமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான பின்னணி குறித்து மலேசிய வான் விபத்து விசாரணைப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சரவாக்கில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஐவரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என  மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top