தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் செயல்படுகின்றன. போதைப்பொருள் விற்பனை, கடத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகின்றன. இந்த போதைப்பொருள் கும்பலை ஒழிக்க அந்நாட்டு போலீசார், ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் எல் தம்போ நகரில் உள்ள மலைப்பகுதியில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த போதைப்பொருள் கும்பல் ராணுவ வீரர்களை சிறைபிடித்து அவர்களை கடத்திச்சென்றது. மொத்தம் 57 ராணுவ வீரர்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன?என்பது குறித்து தெரியாத நிலையில் அந்த மலைப்பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.