இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, மேலும் மூன்று பேருக்கு ஈரான் நேற்று துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் -மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த, 13ல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின், மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாக, 700க்கும் மேற்பட்டோரை கடந்த சில நாட்களில் ஈரான் கைது செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தலையீட்டால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. போர் முடிந்த பிறகு, நேற்று மூன்று பேரை ஈரான் துாக்கிலிட்டது.
மூவருக்கும், ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, கடந்த பத்து நாட்களில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆறு பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.