ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு மாறியுள்ளன.
ரஷ்யாவின் 2022 படையெடுப்புக்குப் பின், உக்ரைன் அரசு ஆண்டுக்கு, 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது. இதனால் அங்கு நுாற்றுக்கணக்கான ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
புதுமைகளை ஊக்குவிக்க ஒழுங்குமுறைகள் தளர்த்தப்பட்டன. இதனால் உக்ரைனைச் சேர்ந்த உலோகவியல், கட்டுமானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ‘ட்ரோன்’ உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பில் இறங்கின. தயாரிப்புகளை போர்க்களத்தில் உடனடி சோதனை செய்யும் வாய்ப்பும் இருந்ததால், ரஷ்யாவின் உத்திகளுக்கு ஏற்ப அவற்றை விரைவாக மாற்றியமைக்கின்றன. இதை உக்ரைன் அரசு ஊக்குவிக்கிறது.
இதில் ‘பயர் பாயின்ட்’ என்ற நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இரண்டு முக்கிய போர் தளவாடங்களை உற்பத்தி செய்கிறது.
ஒன்று எப்.பி., – 1 என்ற வெடிக்கும் ட்ரோன்கள். ஆளில்லா விமானம் எனப்படும் இந்த ட்ரோன்கள் 1,600 கி.மீ., வரை பயணிக்கும் திறன் கொண்டவை.
இரண்டாவது ‘பிளமிங்கோ க்ரூஸ்’ ஏவுகணை. இது 3,000 கி.மீ., துார இலக்கை தாக்கக் கூடியது.கடந்த 2023ல் எப்.பி., – 1 ட்ரோன் உருவாக்கப்பட்ட பின், மாதம் 30 ட்ரோன்கள் தயாரிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை தாண்டி தற்போது மாதம் 100 ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ட்ரோனின் விலை 45 லட்சம் ரூபாய்.இது குறித்து பயர் பாயின்ட் நிறுவனத்தின் ஆயுத வடிவமைப்பாளர் இரினா டெரெக் கூறியதாவது:
ரஷ்யாவை போல எங்களிடம் அதிக மனிதவளமோ அல்லது பணமோ இல்லை. எனவே வான் வழி தாக்குதல்கள் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி.
எப்.பி., – 1 ட்ரோன்கள், 60 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும். ரஷ்யாவுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60 சதவீதம் இந்த ட்ரோன் மூலம் நடந்தவை. அதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.
பயர் பாயின்ட் நிறுவனம் தற்போது தினம் ஒரு பிளமிங்கோ க்ரூஸ் ஏவுகணையை உற்பத்தி செய்கிறது. அக்டோபருக்குள் நாளொன்றுக்கு ஏழு ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனை எட்ட முடியும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாட்டு அதிபர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றார். இருப்பினும் நாட்டின் பாதுகாப்பில் சுயசார்பு என்ற நோக்கத்துடன் உக்ரைன் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து உக்ரைனின் ஆயுதக் கொள்முதல் முகமையின் தலைவர் ஆர்சன் ஜுமாடிலோவ் கூறுகையில், “மற்றவர்களை நம்பி இருப்பதை விட, எங்களை நாங்களே பாதுகாத்து கொள்ளும் திறன் தான் எப்போதும் சிறந்த உத்தரவாதமாக இருக்கும்,” என்றார்.