ஜெருசலேம்:மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை துவக்கியது.
மேலும், ஹமாஸ் அமைப்புக்கு உதவிய பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.
இந்நிலையில், கடந்த 8 முதல் 10ம் தேதி வரையிலான 72 மணி நேரத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் ஆறு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
காசா காசாவில் இஸ்ரேல் கடந்த 9ம் தேதி முதல் நடத்திய தாக்குதலில் இங்கு 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற, காசாவில் உள்ள உயரமான கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசி வருகின்றனர்.
லெபனான் கடந்த 8ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள், லெபனானின் பெக்கா மற்றும் ஹெர்மல் மாவட்டங்களில் தாக்குதல் நடத்தின.
லெபனானுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.
சிரியா சிரியாவில் 8ம் தேதி இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் பல இடங்களை தாக்கின. ஹோம்ஸில் உள்ள சிரிய விமானப்படை தளம் மற்றும் லடாக்கியாவுக்கு அருகிலுள்ள ராணுவ கட்டடம் அழிக்கப்பட்டன.
துனீஷியா காசாவிற்கு இஸ்ரேலின் தடையை மீறி உதவி பொருட்களை அனுப்புவதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலி ‘புளோடில்லா’ என்ற கப்பலை அனுப்பியது. இது, நேற்று முன்தினம் துனீஷியா துறைமுகத்தை அடைந்தது. அப்போது அந்த கப்பலை, ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இதனால், கப்பலின் மேற்பகுதியில் தீ பிடித்தது. அது உடனடியாக அணைக்கப்பட்டது.
கத்தார் இஸ்ரேல் விமானப்படை கடந்த 8ம் தேதி, கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் தலைமை அலுவலகத்தை தாக்கியது. இதில், ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன், அவரது அலுவலக இயக்குநர், மூன்று பாதுகாவலர் மற்றும் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி என ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைவர்கள் தப்பித்ததாக கூறப்படுகிறது.
ஏமன் ஹவுதி பயங்கரவாதிகள் வசமுள்ள ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை, அரசு கட்டடங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது குண்டு வீசப்பட்டதில், 35 பேர் கொல்லப்பட்டனர்; 131 பேர் காயமடைந்தனர்.
ஹவுதி பயங்கரவாத தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.