ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, பாரிஸின் மதிப்புமிக்க அரபு உலக முகமையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் பிரெஞ்சு கலாச்சார அமைச்சர்.
அத்துடன் அவர் மீது நிதி தொடர்பான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 86 வயதாகும் Jack Lang என்பவரே எப்ஸ்டீன் விவகாரத்தில் பதவி துறந்துள்ளார்.
எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சகத்தால் கூட்டப்பட்ட ஒரு அவசரக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்த நிலையில், அவர் திடீரென்று அரபு உலக முகமையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக, எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயர்கள் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, பிரெஞ்சு நிதி சட்டத்தரணிகள் அலுவலகம், ஜாக் லாங் மற்றும் அவரது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான கரோலின் லாங் ஆகியோர் மீது தீவிரமான வரி ஏய்ப்பு மூலம் பணமோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு விசாரணையைத் தொடங்கியது.
ஆனால், இருவரும் அது தொடர்பில் மறுப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்க நீதித்துறை ஜனவரி 30 அன்று வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் சமீபத்திய உதாரணம் லாங்கின் பதவி விலகல் என்றே தெரிய வருகிறது.
அந்த ஆவணங்களில் பல, எப்ஸ்டீனின் உலகளாவிய தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன. எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய பிரான்சின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி லாங் என்றே கூறப்படுகிறது.
1980கள் மற்றும் 90களில் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரானின் கீழ் லாங் கலாச்சார அமைச்சராகப் பணியாற்றினார். மேலும் லூவர் பிரமிடு கட்டிடம் போன்ற முக்கிய நவீன கட்டிடக்கலைப் திட்டங்களையும் அவர் மேற்பார்வையிட்டார்.
2013 ஆம் ஆண்டு முதல், அவர் அரபு உலக நிறுவனம் (Institut du Monde Arabe) என்ற கலாச்சார மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தலைமை தாங்கி வருகிறார். இந்த நிறுவனம் அரபுலகம் குறித்த புரிதலை மேம்படுத்துகிறது மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது.
கடந்த 2012 மற்றும் 2019-க்கு இடையில் எப்ஸ்டீனுடன் லாங் அவ்வப்போது தொடர்பில் இருந்ததும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த ஆவணங்களில் லாங்கின் பெயர் 600-க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது மகளின் பெயரும் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தது.
இளம் கலைஞர்களின் படைப்புகளில் முதலீடு செய்வதற்காக, 2016-ஆம் ஆண்டில் எப்ஸ்டீனுடன் இணைந்து ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை நிறுவியதை மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, லாங்கின் மகள் கரோலின் லாங் இந்த வாரம் பிரான்சின் சுதந்திரத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார்.
2019ல் எப்ஸ்டீனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தான் அந்த வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, பிரெஞ்சு புலனாய்வு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கரோலின் லாங் என்பவரும் எப்ஸ்டீனின் உயிலில் 5 மில்லியன் யூரோக்களின் பயனாளியாக இடம்பெற்றிருந்தார்.
ஆனால், அந்த உயில் பற்றி தாம் கேள்விப்பட்டதே இல்லை என்றும், அப்படிப்பட்ட எந்த ஆவணத்தையும் பார்த்ததில்லை அல்லது எந்த நிதியையும் பெற்றதில்லை என்றும் கரோலின் மறுத்துள்ளார்.
