இராணுவச் செலவினங்கள் தொடர்பான தகராறு காரணமாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி பதவி விலகியுள்ளார்.
பிரித்தானிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டே அவர் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், பிரதமர் ஸ்டார்மர் சமீப காலமாகத் தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு செயலர் ஹீலி பிரதமருக்கு எழுதிய கடிதமொன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ‘பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி, தற்போதைய முக்கியத்துவம் மிக்க நேரத்தில் பாதுகாப்புக்கும் நாட்டிற்கும் தேவையானதை விட மிகவும் குறைவாக உள்ளது’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, பிரித்தானியாவின் பாதுகாப்பை சீரமைக்கும் திட்டத்திற்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில்
ஹீலியின் இராஜினாமா நிகழ்ந்துள்ளது. அரசாங்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளை இந்த இராஜிநாமா எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
