ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல பகுதிகளை வான்வழியாக தாக்கியது.இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பகுதிகள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் நீரிணை என்ற உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் பாதையை ஈரான் மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த கடல் வழி மூடப்பட்டதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எர்பில் நகரில் உள்ள ஹரீர் விமானப்படை தளம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தலைமையகம் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது 5 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தளம் சர்வதேச கூட்டணி படைகளுக்கான முக்கிய இராணுவ மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரானுடன் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் நாட்டில் 2,339 பேர் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அயதுல்லா அலி காமேனி உயிரிழந்த நிலையில், அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரும் சமீபத்திய தாக்குதல்களில் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்ட முதல் அறிக்கை ஈரானின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த அறிக்கையில், ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்றும், அந்த பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவு தொடரும் என்றாலும், அமெரிக்க இராணுவ தளங்களை மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த மோதல்களின் தொடர்ச்சியாக வளைகுடா கடற்பகுதிகளில் பல சரக்கு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அருகே இரண்டு கப்பல்களும், ஐக்கிய அரபு அமீரகம் அருகே ஒரு கப்பலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 6 கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து, ஒரு பீப்பாய் எண்ணெய் 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வளைகுடா நாடுகளில் வசித்து வரும் பல்வேறு நாடுகளின் குடிமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
