ஈரானுக்கு வடகொரியா இதுவரை எந்தவிதமான ஆயுதங்களையோ அல்லது இராணுவத் தளவாடங்களையோ வழங்கவில்லை எனத் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIS) தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பார்க் சுன்-வோன் (Park Sun-won), உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
வடகொரியா ஈரானிடமிருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணமாக, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டபோது வடகொரியா எவ்வித இரங்கல் செய்தியையும் அனுப்பவில்லை என்றும் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் பார்க் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள முக்கிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஒரு புதிய தந்திரோபாய வெளியைப் (New diplomatic space) பெறுவதற்கான முயற்சியாக வடகொரியாவின் இந்த நகர்வு இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியோங்-க்வோன் (Lee Seong-kwon) கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் உயர்மட்டச் சந்திப்பிற்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதையும் வடகொரியா தவிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ள சூழலில், வடகொரியாவின் இந்த இராஜதந்திர மாற்றம் சர்வதேச அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
