மேற்கு துருக்கியில் நேற்று முன்தினம் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், ஒன்பது மாத ஆண் குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பமுக்கலே சுற்றுலா நிறுவனத்திற்குச் சொந்தமான அப்பஸ் வண்டி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:40 மணிக்கு, டெனிஸ்லி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலைத் தடுப்புகளில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இப்பஸ் வண்டி 38 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்களுடன் இஸ்மிரிலிருந்து மத்திய தரைக்கடல் நகரமான அன்டால்யாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தது. இவ்விபத்தில் சுமார் 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 50 வயதான சாரதி மற்றும் பச்சிளம் குழந்தையின் தந்தையும் அடங்குவர்.
ஹஜ் பெருநாளின் நிமித்தம் மக்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்கவும், விடுமுறையைக் கழிக்கவும் பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
