ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றிற்கு அருகே சனிக்கிழமை (01) மாலை பெண் ஒருவர் கொண்டு சென்ற வெடிகுண்டு வெடித்ததில் 03 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவின் குட்ரின்க்ஸ்காயா சதுக்கத்தில் உள்ள ஸ்டாலின் காலத்து உயரமான கட்டடத்தில் இயங்கும் இத்தாலிய உணவகத்திற்கு வெளியே அந்நாட்டுநேரப்படி இரவு 8:00 மணிக்குச் சற்று முன்பாக இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்தப் பெண், பாதுகாப்புப் பணியாளர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்தில் படுகாயமடைந்த 21 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் சுமந்து வந்த குண்டு தொலைவிலிருந்து வேறொருவரால் வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தான் ஏந்தி வந்தது வெடிபொருள் என்பது அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் ‘கொமர்சன்ட்’ நாளிதழ் தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உணவகத்தின் வெளிப்பகுதியில் அமர்ந்திருந்த விருந்தினர்களை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தன்று அவ்வுணவகம் ஒரு தனியார் நிகழ்விற்காகப் பதிவு செய்யப்பட்டு மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்தை ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்களையோ, இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரென்ற தகவலையோ அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
