லக்னோவில் தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ அடுத்த புரானியா கிராமத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தரைத்தளத்தில் செல்லப்பிராணிகள் கடையும், முதல் தளத்தில் தனியார் பயிற்சி மையம் மற்றும் பிற கடைகளும் இயங்கி வந்தது.
இன்று மதியம் பயிற்சி மையத்தில் எதிர்பாராதவிதமாக பற்றிய தீ வணிக வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.
பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைகட்டுப்படுத்தி, உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
13 மாணவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 முதல் 25 மாணவர்கள் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
துயரச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலிகர் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு லக்னோ திரும்புகிறார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு, டிஜிபி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரை சம்பவ இடத்திற்குச் சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அளித்துள்ளார்.
