Canada

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: கனடாவிலிருந்து மில்லியன் கணக்கான பரல்களுடன் புறப்பட்ட எண்ணெய் கப்பல்

மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கனடாவின் “டிஎம்எக்ஸ்” மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.

கப்பல் கண்காணிப்பு நிறுவனமான “கெப்லர்” வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டிற்குப் பின்னர் கனடாவிலிருந்து ஜப்பானுக்கு முதன்முறையாக மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

எக்ஸான் மொபில் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட “ஃப்ரீடம் க்ளோரி” என்ற கப்பல், 7,50,000 பரல் மசகு எண்ணெயுடன் நேற்று(29.07.2026) வான்கூவர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

ஜப்பானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான “எனியோஸ்” இந்த மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை டோக்கியோ நிர்வாகம் 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இந்த மோதல் வெடிப்பதற்கு முன் வரை, ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை ஹோர்முஸ் நீரிணை வழியே இறக்குமதி செய்து வந்தது.

தற்போது போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டதால், ஜப்பான், இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கனடாவிலிருந்து மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்ய தீவிரமாக இறங்கியுள்ளன.

கனடாவின் “ட்ரான்ஸ் மவுண்டன்” குழாய் வழித் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 8,90,000 பரல் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த ஆண்டில் வான்கூவரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த மசகு எண்ணெய்யில் 77 சதவீதம் ஆசிய நாடுகளுக்கே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top