News

ரணிலுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்!

 

 

9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 09 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே இன்னும் வெளியாகவில்லை.

அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை, நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி உள்ளிட்ட சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளன.

எனினும், சர்வக்கட்சி அரசில் பங்காளிகளாகுவது குறித்து மேற்படி கட்சிகள் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ( ஈடிபிடி), செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன தேசிய அரசின் பங்காளியாவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

9 ஆவது நாடாளுமன்றத்தில் 10 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் அங்கம் அங்கம் வகிக்கின்றன. (தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்) இதில் 9 தமிழ்க் கட்சிகளும், நான்கு முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு இணங்கியுள்ளன.

1. இலங்கை தமிழரசுக்கட்சி

2. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ

3. தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

4. ஜனநாயக மக்கள் முன்னணி

5. மலையக மக்கள் முன்னணி

6. தொழிலாள் தேசிய முன்னணி (தமிழ் முற்போக்கு கூட்டணி)

7.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – ஈபிடிபி

8. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

9. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

1.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

3. தேசிய காங்கிரஸ்

4.முஸ்லிம் தேசியக் கூட்டணி

9 ஆவது நாடாளுமன்றத்தில் மக்கள் வாக்களிப்பு மற்றும் தேசிய பட்டியல் ஊவாக தெரிவாகிய 28 தமிழ் எம்.பிக்களும், 20 முஸ்லிம் எம்.பிக்களும் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு , நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வென்ற கட்சிகளின் எண்ணிக்கை 14. ( அதாவது நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள்) அதேசமயம் பல தமிழ்க் கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top