அண்மைய சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குவிந்த மக்களில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 24) வரலாறு காணாத அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகும் நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பிரான்ஸில் வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் மக்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 18 ஆம் திகதி முதல் 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, கடந்த 18 ஆம் திகதி முதல் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்பார்வையற்ற நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாதாரணமாக காலகட்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் பதிவாகும் வெப்பம் வரலாற்று பதிவுகளாக மாறிவருகிறது. மாதங்களை பொருட்படுத்தாமல், பல்வேறு நகரங்கள் முன் எப்போதும் இல்லாத அளவு வெப்பத்தை பதிவு செய்கின்றன.
1947 ஆம் ஆண்டில் இருந்து பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையாக தற்போது இருக்கிறது. அவசரகால எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
