தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் இரணைமடுச் சந்தியில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, மதத் தலைவர்களுடன் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் பொதுச்சுடர் ஏற்றியதுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களிற்காக மலர் அஞ்சலியும் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மதப்பிரார்த்தனையும், அஞ்சலியும் இடம்பெற்றது.
இதன்போது அஞ்சலி உரையாற்றிய தென்னிந்திய திருச்சபையின் பிராந்திய குருமுதல்வர் வண.ஜோசப் குறிப்பிடுகையில், இவ்வாறான இனத்துக்கு எதிரான நினைவேந்தல்களை யூதர்களும் அனுஸ்டித்தார்கள். பாஸ்கா பண்டிகை மூலம் புளிப்பில்லா அப்பம், கசப்பான கீரை என உணவில் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த உணவை அருந்தும் போது சிறுவர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்புவார்கள். இதன்போது பெற்றோரும், பெரியோரும், மத தலைவர்களும் அப்பிள்ளைகளுக்கு அதனை தெளிவுபடுத்துவர். அதே போன்று, தமிழ் மக்களும் தமது இழப்புக்களை அடையாளப்படுத்த முள்ளிவாய்கால் கஞ்சியை நினைவுப்படுத்துவர்.
அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர் என்றார். தொடர்ந்து அஞ்சலி உரையாற்றிய தென்னிந்திய திருச்சபையின் சிரேஸ்ட ஊழியர் வண.குகனேஸ்வரன் குறிப்பிடுகையில்,
இன்று எமது இனத்தின் உரிமையை கனடா அங்கீகரித்திருக்கின்றது. அந்த செய்தி எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. இவ்வாறான நினைவு கூரல்கள் எமக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.