சமீபத்திய நீதிமன்ற விவகாரங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் அழைத்துவருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், கடந்த காலங்களில் ராஜபக்சக்களுக்கு எதிராக என்னதான் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலத்த கருத்து நிலவி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சமீபத்திய நீதிமன்ற உத்தரவு ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தற்போது பல சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்போதே, ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கு எதிராக ஒட்டுமொத்த பொதுமக்களும் தங்களின் தீர்ப்பை தெளிவாக வழங்கிவிட்டனர் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளார்.
